கன்னியாகுமரி, டிச. 4 –
கன்னியாகுமரியை அடுத்த சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் உள்ளது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி துறைமுகத்தின் அருகே புதிய விசைப்படகுகள் தயார் செய்யும் பணியும், பழைய விசைப் படகுகளை பராமரிக்கும் பணியும் நடந்து வருகிறது. விசைப்படகுகள் தயாரிப்பில் மீதி வரும் பைபர் கழிவுகளை கடற்கரை பகுதியின் அருகே கொட்டி வைத்துள்ளனர்.
மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள பைபர் கழிவுகளில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. மேலும் கடற்கரை ஓரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. அங்கு விசைப்படகு பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மணி நேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகில் விசைப்படகு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.



