மார்த்தாண்டம், நவ. 12 –
ஐரேனிபுரம் அருகே அரியூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் அஜிகுமார் என்பவர் மகள் சரிதா (30). இவருக்கும் நட்டாலம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (40) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 60 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு வரதட்சணை குறைவு எனவும், அதிக வரதட்சணை வேண்டும் என கேட்டு கணவன் உறவினர்கள் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அஜித்குமார் வெளிநாடு சென்றுள்ளார். பின்னர் மனைவி சரிதாவுக்கு பணம் அனுப்புவது கிடையாதாம். மேலும் தொலைபேசி மூலம் பேசுவதும் கிடையாது. இந்த நிலையில் அஜித்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்தார். ஆனால் மனைவி சரிதாவிடம் இருக்கும் நகைகளை தன்னிடம் தர வேண்டும் எனவும், சரிதாவின் பெற்றோருடன் பேசக்கூடாது என பல கண்டிஷன்களை போட்டுள்ளனர்.
இந்த நிலையில் அஜித்குமார் உள்ளிட்ட உறவினர்கள் ஜஸ்டின், லதா, ராஜகுமார், கீதா ஆகிய 5 பேர் சேர்ந்து சரிதாவை ஆபாசமாக பேசி, கொடுமை படுத்தி, அவரது தாலி செயினை கழற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சரிதா குழித்துறை நடுவர் நீதிமன்றம் 1ல் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


