மார்த்தாண்டம், டிச. 16 –
திருவட்டாறு அருகே உள்ள வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். மகன் அருண் பால் (39). அரசு ஒப்பந்ததாரர். இவர் திமுகவின் திருவட்டார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவரது மனைவி ஷைபா. இவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு முதல் கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதை அடுத்து விவாகரத்து கேட்டு அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு பத்மநாபபுரம் கோர்ட்டில் இன்று வருவதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து அருண் பாலை கோர்ட்டில் ஆஜராக வரும்படி அவரது வக்கீல் தெரிவித்தாராம். இந்த நிலையில் நேற்று இரவு அருண்பால் உணவு சாப்பிட்டு விட்டு, தனது அறையில் உறங்க சென்றார். இன்று காலை அவர் அறையில் இருந்து எழுந்து வரவில்லை. தொடர்ந்து அவரது தாயார் மகனை எழுப்ப சென்றபோது, அங்கு அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
தாயாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று அருண் பாலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



