இரணியல், டிச. 18 –
கருங்கலில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் ஒன்று இன்று மதியம் திங்கள்சந்தை காமராஜர் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றது. பயணிகளை ஏற்றிவிட்டு சிறிது நேரத்தில் பஸ் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்ஸில் குருந்தன்கோட்டை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் பயணம் செய்தார். பஸ் இரணியல் பகுதியில் வந்தபோது கைப்பையில் இருந்த பர்ஸை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அந்த பர்சில் ரூ. 5 ஆயிரம் மற்றும் ஒரு ஏடிஎம் கார்டு இருந்துள்ளது. இதனால் அவர் கூச்சலிட்டார்.
அப்போது பஸ் இரணியல் ஜங்ஷனில் வந்து நின்றது. இதற்கிடையில் மர்ம பெண் ஒருவர் அந்த பர்ஸை பணத்துடன் பக்கத்து சீட்டுக்கு அடியில் போட்டுவிட்டு இறங்குவதை சகப் பயணிகள் பார்த்தனர். அவருடன் வந்திருந்த இன்னும் 2 பெண்கள், 2 குழந்தைகளுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி தப்ப முயன்றனர். பஸ்சில் இருந்து பயணிகள் கூச்சலிடவே அந்த கும்பலை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் 3 பெண்களையும், 2 குழந்தைகளுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நடந்த விசாரணையில் 2 பெண்கள் மது போதையில் இருந்ததும், ஒரு பெண் கர்ப்பிணி என்பதும் தெரிய வந்தது. இவர்கள் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள். இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் திருட்டு சம்பவம் தொடர்பாக யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதனால் போலீசார் அந்த 3 பெண்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


