களியக்காவிளை, டிச. 4 –
களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (48). பாரதிய ஜனதா கட்சி பிரமுகர். இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வந்து வின்சென்ட் திடீரென மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அவர் தாய் பொன்னம்மாள் உடனடியாக இது குறித்து தனது மற்றொரு மகன் ரவிக்குமார் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். ரவிக்குமார் மற்றும் குடும்பத்தினர் வின்சென்டை ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் வின்சென்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. களியாக்காவிளை போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வின்சென்ட் கடுமையாக தாக்கப்பட்ட அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து வின்சென்ட் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒற்றாமரம் என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வின்சென்ட் மது குடிக்க சென்றது தெரிய வந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் கண் ஆய்வு செய்தபோது வின்சென்ட் மது குடிப்பதற்கு சென்றபோது அங்கு ஏற்கனவே காங்கிரஸ் பிரமுகர் உட்பட 5 பேர் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததும், வின்சென்ட் மற்றும் 5 பேரும் அரசியல் ரீதியாக பேசும்போது தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. ஆத்திரமடைந்த ஐந்து பேர் சேர்ந்து வின்சென்டை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலின் பின் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார். எனினும் வின்சென்ட் மீது ஆத்திரம் அடங்காத காங்கிரஸ் பிரமுகர்கள் ஐந்து பேர் மீண்டும் மெதுகும்மலில் உள்ள வின்சென்ட் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மீண்டும் பயங்கரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் மர்மசாவு என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கு இடையில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக களியக்காவிளை காவல் நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொலைக்கு காரணமான கும்பலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.



