சுசீந்திரம்.ஏப்.19
சித்திரைதிருவிழா
நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளை ஊர் இந்து நாடார் சமுதாய வகை கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை பெருந்திருவிழா நேற்று 18-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று 18-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சியும், 2:15 மணிக்கு ஊர் பொதுமக்கள், பக்த கோடிகள் முக்கடலும் சங்கமிக்கும் குமரி கடலில் நீராடி புனித தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், காலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், வருஷாபிஷேகமும், 108 கலச பூஜை சுவாமிகளுக்கு சிறப்பு யாகசாலை பூஜை அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. இதற்கு ஊர் தலைவர் வக்கீல். வை. செல்வகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சு. திருநாமச்செல்வன்,செயலாளர் சு. கண்ணன், பொருளாளர் சி. ஜெயகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோவில் பூஜிதகுரு ரமேஷ் போற்றி கலந்து கொண்டார். இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் திருக்கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியை நிர்வகிக்கும் தென்குமரி கல்விக் கழக செயலாளருமான பி.டி. செல்வகுமார், தென்குமரி கல்விக் கழகத்தின் நிறுவன செயலாளர் வக்கீல் எஸ். ராஜகோபால், ஓய்வு பெற்ற இணை இயக்குனர் அனுசியாசெல்வி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வி. கோபாலகிருஷ்ணன், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனையும்,பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் அன்னதானமும் நடைபெற்றது.
108 திருவிளக்கு பூஜை
மாலை 6 மணிக்கு மேலக்காட்டுவிளை ஊர் லெஷ்மி அம்மை மகளிர் மன்றத்தார் சார்பாக நடத்தும் 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியும்.இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட தாய்மார்கள், சகோதரிகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கைலாசநாதர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறுசேமிப்பு உறுப்பினர்களுக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும், 9:00 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும்,பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.
இதே போல் விழா நாட்களில் தினமும் மங்கள இசையும், திருப்பள்ளியெழுச்சியும், சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும்,அன்னதானமும் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 25-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும, 9 மணிக்கு குருசுவாமி கதை வில்லிசையும், பகல் 1 மணிக்கு குருசுவாமிக்கு உச்சகால அலங்கார தீபாராதனையும், 2 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு தீபாராதனையும், 7:15 மணிக்கு அருள்மிகு குருசுவாமி கோவில் ரத வீதியை சுற்றி வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 26-ம் தேதி சனிக்கிழமை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், 5.30 மணிக்கு கானியாளர் சுவாமிக்கு அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும், 9 மணிக்கு கானியாளர் சுவாமி பிறப்பு, லெட்சுமி தவ நிலை கதை வில்லிசையும், மதியம் 1 மணிக்கு அருள்மிகு கானியாளர் சுவாமிக்கு உச்சகால அலங்கார தீபாராதனையும், 2 மணிக்கு மாபெரும் அன்னதானமும், மாலை 4 மணிக்கு மங்கல இசையும், 5 மணிக்கு தீபாராதனையும், 5.15 மணிக்கு அருள்மிகு கானியாளர் சுவாமி பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஊர் வீதிகளில் வாகன பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், 9:30 மணிக்கு கானியாளர் சுவாமி கதை வில்லிசையும், 11 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது.
பொங்கல்வழிபாடு
திருவிழாவின் 10-ம் நாளான வருகிற 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4. 30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும், 6 மணிக்கு திருக்கோவில் முன் பொதுமக்கள் பொங்கலிடுதல் நிகழ்ச்சியும்,8 மணிக்கு வெங்கலமகராஜன் கதை வில்லிசையும், மதியம் 1 மணிக்கு அருள்மிகு பத்திரகாளியம்மனுக்கு உச்சகால அலங்கார தீபாராதனையும், 2 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு வரிதாரர்களுக்கு பிரசாதம் வழங்குதலும், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும், நள்ளிரவு 11 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



