திருவட்டார், ஏப்- 6
திருவட்டார் அருகே செங்கோடி பகுதியை சேர்ந்தவர் பாலிஸ் (70). இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. பாலிஸ் மனைவி ஏற்கனவே 7 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தற்போது சுகந்தி என்ற மகள் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பாலிஸ் தனது மனைவியின் கல்லறைக்கு சென்று அங்கே வெகு நேரமாக இருந்தார். பின்னர் கல்லறை மேல் மயங்கிய நிலையில் படுத்து இருந்தார். இதை எடுத்து தந்தையை காணாமல் தேடிய மகள் சுகந்தி, தனது தாயின் கல்லறையில் தந்தை மயங்கி கிடப்பதை கண்டு உடனடியாக அக்கம்பக்கத்தின் உதவியுடன் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றார்.
டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. அவர் விஷம் குடித்து இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.