நாகர்கோவில், நவ. 12 –
பாஜகவின் மாநில வர்த்தகப் பிரிவு தலைவர் சதீஷ் ராஜா கொடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஒட்டுமொத்த தேச மக்களுமே வேதனையின் உச்சத்தில் உள்ளனர். ஆனால் எந்த சம்பவம் நடந்தாலும் அதை தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் குறுகலான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தினர் இதையும் அதே கண்ணோட்டத்துடன் தான் அணுகுகின்றனர். அதற்கு மனோ தங்கராஜ்ம் விதிவிலக்கல்ல. அவர் இந்த சோக சம்பவத்திலும் அரசியல் செய்யும் முனைப்போடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேசி வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி செங்கோட்டை சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட கார் யாருடையது என்பதில் தொடங்கி காரை ஒட்டி வந்தவர் யார் என்பது வரை பல்வேறு பின்னணிகளை அம்பலப்படுத்தி உள்ளது. விசாரணையும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை கையாண்டு வருகிறது. ஆனால் இதெல்லாம் மனோ தங்கராஜ் அவர்களுக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாரா? எனும் கேள்வியும் எழுகிறது.
இன்னொருபுறத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகம் முதல் கோவை பிருந்தாவன் நகர் வரை மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தை அதிர வைத்தது. கடந்த 45 நாட்களில் மட்டும் திருவண்ணாமலையில் இரண்டு காவலர்கள், மயிலாடுதுறையில் ஒரு காவலர் என மூன்று காவலர்கள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருவர் நிரந்தர பணி நீக்கமும் ஒருவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
மக்களை பாதுகாப்பதற்கு காவலர்கள் என்ற நிலை மாறி காவலர்களிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கு தமிழகம் தள்ளிவிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் வெறும் விளம்பர மாடலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் இதுவரை 24 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. மனோ தங்கராஜ் ஒரு சம்பவம் நடந்த உடனேயே ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்.
சங்கடமான நேரங்களில் அரசியல் செய்வதை விடுத்து விட்டு, மக்களுக்கு ஆறுதல் சொல்கிற பண்பும் பக்குவமும் தான் இப்போதைக்கு தேவை. அந்தப் பண்பை மனோ தங்கராஜ் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



