மார்த்தாண்டம், மே – 24.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (62). ஆட்டோ டிரைவர். இவர் தனது மகளை அழைத்துக் கொண்டு தனது ஆட்டோவில் நேற்று மாலை கொல்லங்கோடு சந்திப்பில் பொருள்கள் வாங்க சென்றார். அந்தப் பகுதியில் மதுபோதையில் நின்ற இரண்டு பேர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி ஐயப்பனை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த மகளையும் தாக்கினர்.
இதை பார்த்த பொதுமக்கள் ஐயப்பனையும், மகளையும் காப்பாற்ற வந்த போது பொதுமக்களையும் அவர்கள் தாக்கினர். இதில் ஜஸ்டின் ராஜதாஸ் (55) மற்றும் மோகன் ஆகியோருக்கும் காயம் ஏற்ப்பட்டது.
தகவல் அறிந்து கொல்லங்கோடு போலீசார் சென்று ஒருவரை கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் கேரளப் பகுதியான பொழியூரை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ரோபின் (35) என்பவரை கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.