கன்னியாகுமரி ஜன 22
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கன்னியாகுமரி பகுதியில் குப்பைகளை சரிவர கையாளாமல் நிலத்தில் குவித்து வைத்திருந்த பேரூராட்சி நிர்வாகம் தற்போது அந்த குப்பைகளை கடற்கரைக்குள் தள்ளும் இந்த காணொளி காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு கடற்கரைக்குள் தள்ளப்படும் இந்த குப்பைகள் நேரடியாக கடலுக்குள் கலக்கும் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் மக்காத நெகிழி பொருள்கள் அடங்கிய இந்த குப்பைகள் கடலுக்குள் கலப்பதால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற சிறு எண்ணமோ அறிவோ இன்றி செயல்படும் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
உலகம் முழுவதும் கடலில் கலக்கும் நெகிழி குப்பைகளால் கடல் வாழ் உயிரினங்களும் கடல் சூழலியலும் பாதிக்கப்பட்டு வருவது பெரும் சவாலாக இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் கடலில் இருக்கும் நெகிழி குப்பைகளை அகற்றுவதற்காக பல கோடிகளை செலவு செய்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இங்கு நடக்கும் இந்த செயல் நம்மை ஆள்பவர்கள் நம் மக்கள் மீதும் நம் மண் மீதும் இந்த சூழல் மீதும் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.இதுபோன்ற செயல்களை நாம் கண்டும் காணாமல் இருப்பது நம் எதிர்கால தலைமுறைக்கு நாமே செய்யும் கேடு.
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் குப்பைகள் சேருவது தவிர்க்க முடியாதது ஆனால் அந்த குப்பைகளை எவ்வாறு கையாள வேண்டும், எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும், எவ்வாறு அகற்ற வேண்டும், எவ்வாறு மறுசுழற்சி செய்ய வேண்டும் என அறிவியல் பூர்வமாக அணுக வேண்டியது தான் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பணி.கழிவு மேலாண்மை என்பது அரசாங்கத்தின் கடமை. இதற்கு உதாரணமாக சுவீடன் நாடு உள்ளது.
அந்த நாட்டில் உற்பத்தியாகும் கழிவுகளில் 95 சதவீதத்தை மறுசுழற்சி செய்து இயற்கை உரம் மின்உற்பத்தி என பயன்படுத்துகிறார்கள். அதை முன்மாதிரியாக கொண்டு நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் கழிவு மேலாண்மைக்கான பல திட்டங்களை முன்வைத்திருக்கிறோம்.
ஆனால் தற்போது தமிழகத்தை ஆள்பவர்களின் கழிவு மேலாண்மை திட்டங்கள் ‘குப்பைகளை கனரக இயந்திரங்கள் மூலம் கடலுக்குள் தள்ளுவது’ என்ற நிலையில் தான் இருக்கிறது.
திடக்கழிவு மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாமல் கன்னியாகுமரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த போகிறார்கள் என்பது மற்றும் ஒரு வேடிக்கை.
முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலை குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அது நடக்காத பட்சத்தில் மக்கள் திரள் போராட்டங்களாகவோ சட்ட வழியிலோ இதற்கான எதிர்வினைகள் வெளிப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



