திருப்பத்தூர்:மே:21, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 15.5.2025 முதல் 19.5.2025 வரையிலான ஐந்து நாட்கள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் பயிலரங்கம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பயிலும் தமிழ், வரலாற்றுத் துறை மாணவர்களை தொல்லியல் அறிஞர்களாக மாற்றும் நோக்கத்தில் பயிலரங்கம் நடத்தப்பட்டது.
தமிழின் தொன்மை எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள், பல்லவர்,சோழர் , பாண்டியர், விஜயநகர காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்செங்கோட்டை சேர்ந்த தொல்லியல் அறிஞர் குழந்தை வேலன் பண்டைய தமிழ் எழுத்துக்களை மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
சங்க கால நடு கற்கள்,பல்லவர் கால நடுகற்கள், சோழர்கால நடு கற்கள், விஜயநகர காலத்தைச் சேர்ந்த நடு கற்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றின் பயிற்சிகளை தொல்லியல் அறிஞர் முனைவர் பூங்குன்றன் பயிற்சி அளித்தார்.
இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வெங்கடேசன் தொல்லியல் நடுகற்கள், நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் இவற்றைப் பற்றியும், வரலாற்றையும் வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் நடைபெற்ற 13 அகழாய்வு களத்தில் பங்கேற்று தமிழரின் தொன்மைகளை வெளிப்படுத்திய தொல்லியல் அறிஞர் கலைவாணன் அகழ்வாராய்ச்சி செய்வதில் நோக்கம் பயன் குறித்து விரிவாக விளக்கினார்.
திருப்பத்தூருக்கு அருகாமையில் உள்ள காரப்பட்டுக்கு அருகே சென்னானூரில் மேற்கொள்ளப்படும் அகழாய்வு களத்திற்கு மாணவர்கள் நேரடியாக சென்று பயிற்சி பெற்றனர்.
சென்னானுர் அகழ்வாராய்ச்சியின் இயக்குனர் பரந்தாமன் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடு எழுத்துக்கள் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரிகள் 3500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பெருங்குடி மக்கள் வேளாண்மையில் சிறந்து விளங்கியதற்கு சான்றாக இரும்பால் ஆன ஏர் கலப்புகளை குழுமுனை கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டி விளக்கினார்.
இப்பயிலரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மோகன் காந்தி சேகரித்து வைத்துள்ள புதிய கற்கால கருவிகள் ஓலைச்சுவடிகள் போர்வாள்கள் சங்க கால செங்கற்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக கண்டறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நடுகள் கல்வெட்டு கருத்திட்டைகள் உள்ளிட்ட செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளை கண்காட்சியாக காட்சிப்படுத்தினார்.
இப்பையில இருந்து கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் மரிய அந்தோணி ராஜ், கல்லூரி இல்லத்தந்தை முனைவர் பிரவின் பீட்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கானி நிலம் முனிசாமி, மதியழகன் கே.சி. எழிலரசன்,முனைவர் நெடுஞ்செழியன் முனைவர் பார்த்திபராஜா, முனைவர் சரளாதேவி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும் முனைவர் முஜீபர் ரஹ்மான்,முனைவர் ரோஸ், முனைவர் மணிமேகலை முனைவர் ஹரிகரன் ஆகியோர் பங்கேற்றனர்.



