கிருஷ்ணகிரி, ஆக. 18 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 216 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 69 ஆயிரத்து 300 மதிப்பில் செயற்கை கால்களை வழங்கினார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக தனது வாழ்க்கையை அர்பணித்த சமூக ஆர்வலர் மற்றும் பொருளாதார முதுகலை பட்டதாரி ஒசூரை சேர்ந்த செல்வி. கௌரி குருநாதன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் 15.08.2025 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரின் மாநில இளைஞர் விருது மற்றும் ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசு பெற்றதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சா. தனஞ்செயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தர்மராஜ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



