ஈரோடு டிச 19 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (வியாழன்) நாளையும் (வெள்ளி) 2 நாட்கள் ஈரோட்டில் பல் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வருகிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வருகிறார். அப்போது அவருக்கு வழி நெடுகிலும் 20 கற்கும் மேற்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதன் பிறகு
முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்து சிறிது ஓய்வு எடுக்கிறார்.பின்னர் மாலை 5 மணி அளவில் மேட்டுக்கடை பகுதியில் உள்ள தங்கம் மகாலில் நடக்கும் தி.மு.க. நிர்வாகிகள் ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதன் பிறகு மாலை 6 மணி அளவில் தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திர குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். இரவில் ஈரோடு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட 6 தளங்கள் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், ஈரோடு பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட வெளிவட்ட சுற்றுச்சாலை (ரிங்ரோடு), ஈரோடு வைராபாளையத்தில் அமைக்கப்பட்ட கூடுதல் உரக்கிடங்கு, சென்னிமலையில் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.சோலாரில் ரூ.18 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள காய்கறி, பழங்கள், மளிகை என மொத்த சந்தை வளாகம் கட்டும் பணியையும் அவர் தொடங்கி வைக்கிறார். மொத்தம் ரூ 1377 கோடி வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 50 ஆயிரத்து 88
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதன் பிறகு அவர் கார் மூலம் கோவை சென்று பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் கோவை சரக டி ஐ. ஜி முத்து சாமி மேற்கு மண்டல ஐ ஜி செந்தில் குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் அதிகாரிகள் விழா நடக்கும் சோலாரில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும் நலத்திட்டங்கள் பெறும் பயனாளிகள்
மற்றும் கட்சி பிரமுகர்கள் பொது மக்கள் அமரும் இடம் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இவர்களுக்கு குடிதண்ணீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.
போலீஸ் துப்பறியும் மோப்ப நாயும் விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தவிர வெடிகுண்டு நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் மூலம் விழா நடக்கும் இடத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் ஈரோடு வருகையை யொட்டி அவரை வரவேற்கும் வகையில் அவர்
வரும் வழி நெடுகிலும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு உள்ளன.