நித்திரவிளை, ஜன- 25
நித்திரவிளை சந்திப்பில் புதுக்கடை பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் (31) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 10 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு நகையை லாக்கரில் வைத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் கடையை திறந்து நகைகளை வெளியே எடுத்து சரி செய்து பார்த்தபோது இரண்டரை கிராம் எடை கொண்ட தங்கம் கம்மல் மாயமாகி இருந்தது.
உடனடியாக கடையில் பொறுத்து இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கடையில் வேலை செய்து வரும் குழித்துறையை சேர்ந்த ஊழியர் ஜெகன் (37) என்பவர் நகையை திருடியது தெரிய வந்தது.
இது குறித்து நித்திரவிளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஜெகனை கைது செய்தனர். விசாரணையில் அவர் திருடிய நகையை மார்த்தாண்டத்தில் உள்ள கடையில் விற்றதாக கூறினார். போலீசார் அந்த நகையை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.