மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் வேளாளர் பொறியியல் கல்லூரி அரங்கில் கல்வி விழிப்புணர்வு மாநாடு தலைவர் ஸ்டாலின்
குணசேகரன் தலைமையில் நடந்தது அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு மாநிலம் உயர்கல்வியில் முன்னணியில் உள்ளது. முழுமையாகக் கல்விபெற்ற மாநிலமாக தமிழ்நாடு மேலும் உயர்வதற்கு அனைத்து தரப்பினரும் அனைத்து வகைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கல்விபெறாத தமிழர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அக்கல்வி பெயரளவிற்கானதாக அல்லாமல் தரம் மிக்கதாக விளங்க வேண்டும். அனைவரும் சமமான கல்வி என்ற நிலை உருவாக வேண்டும்.
சுய சிந்தனையையும், சமூக அக்கறையையும் உருவாக்கும் கல்வி முறை இன்றைய காலத்திற்கு தேவையாக உள்ளது. ஜனநாயகம் என்பது மனிதப் பண்புகளில் மேலானது.
ஆக்கப்பூர்வமான கல்வி பரவலாக்கப்படும் போது ஆழப்படுத்தப்படும் போது குடிமக்களின் அரசியல் அறிவும், மனிதநேயக் கண்ணோட்டமும், பொதுமைப் பார்வையும், சகோதரத்துவமும் வளரும் மேம்படும்.
கல்வி வளர்ச்சிக்காக ஒவ்வெரு குடிமகனும் தனித்தனியாகவும், ஒன்று கூடியும் சிந்தித்து செயல்பட கடமைப்பட்டுள்ளனர். கல்வி வளர்ந்தால் அனைத்து வகைகளிலும் நாடு வளரும்.
மக்களிடையே பண்பட்ட, பக்குவப்பட்ட அணுகுமுறை மேம்படும். கல்வி நாட்டின் பல பிரச்னைகளுக்கு தன்னெழுச்சியாக தீர்வை வழங்கும். கிராமப்புற கல்வி வளர்ச்சிக்கான சேவையே அனைத்து சேவைகளிலும் முதன்மையானது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கல்வி சேவகர் பாபர் அலி பேசியதாவது
நான் பள்ளி மாணவனாக இருந்தபோது 9 வயதில் கல்கத்தா அருகில் உள்ள எங்கள் ஊரான முர்ஷிதாபாத்தில் கல்வி வாய்ப்பில்லாத சில மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சேவையை தொடங்கினேன். கடந்த 23 ஆண்டுகளில் 8 ஆயிரம் மாணவர்கள் நான் நடத்திவரும் பள்ளியில் படித்து எழுத்துதேர்ச்சி பெற்றுச்சென்றுள்ளனர்
மனித மாண்புகளை கற்றுத்தரும் கல்விதான் இன்றைய தேவையாக உள்ளது. மனிதர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் வல்லமை கல்விக்கு உள்ளது. மிகவும் பிற்பட்ட பகுதியான எங்கள் பகுதியில் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஒரு சவலாக உள்ளது என்றார்.
வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர், அறங்காவலர் யுவராஜா, வேளாளர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயராமன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.



