தேனி.
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும்,இராசா.அருண்மொழி அவர்களை துணைத்தலைவராக கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி, நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச்சார்ந்த 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இதுதொடர்பான தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.