நாகர்கோவில் ஆக 8
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் மற்றும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எள்ளுவிளை. கேசவன்புத்தன்துறை, சைமன் காலனி, குருந்தன்கோடு ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று எள்ளுவிளை சமூகநலக்கூடத்தில் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதியும். தமிழ்நாட்டுக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு. கடந்த சில நாட்களுக்கு முன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கூலித்தொழில் செய்யும் ஏழை எளிய மக்களின் வசதிக்குகேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் வழிவகை செய்கிறது.
அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை. ஊரக வளர்ச்சி துறை,சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 15 அரசு துறைகளை சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக எள்ளுவிளை ஊராட்சிக்குட்பட்ட எள்ளுவிளை சமூகநலக்கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் எந்த எந்த துறைகளை சார்ந்தது என சரிபார்க்கப்பட்டு, கோரிக்கை மனுக்களை உரிய துறையில் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இம்முகாமில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள். பணியாளர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள், ஐயப்பாடுகள், பிரச்சனைகளை கனிவுடன் கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து தகுதியான விண்ணப்பங்களுக்கு 30 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதில் கிடைக்க பெறாத பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு. அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற நிகழ்வுகளில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.