நாகர்கோயில் – ஜூலை, 27,
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பெரிய தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று ஏராளமானோர் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களுடைய வார்டு பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தெருக்கள் சிதலமடைந்து பொதுமக்கள் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு உள்ளதாகவும், சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை தெருவில் பகலில் கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு கற்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதாகவும் மழைக்காலங்களில் மழை நீர் தெரு ஓரங்களில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பெரும் நோய் தொற்று ஏற்படுவதாகவும், பள்ளி , கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் மாணவ மாணவிகள் இரவு நேரங்களில் சில பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதாகவும், இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் வீட்டிற்கு வருவதற்கு பெரும் சிரமமாக இருப்பதாகவும், மருத்துவ மற்றும் அவசர தேவைகளுக்கு கூட நான்கு சக்கர மற்றும் மூன்று சக்கர வாடகை வாகன ஓட்டிகள் எங்கள் பகுதி தெருக்களுக்குள் நுழைய மருக்கும் அவலமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், கழிவு நீர் ஓடைகள் பராமரிப்பின்றி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாகவும், வீட்டு இணைப்பு குடிநீர் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் கழிவு நீரோடு கலந்து தெருக்களில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பெரும் மன உளைச்சலுக்கும், இன்னலுக்கும் இப்பகுதி மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளதாக பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரையிலும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இப்பகுதி மக்கள் நேற்று திடீரென ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இனி மேலும் உடனடியாக பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம் எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வில்லை எனில் இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.