அரியலூர், ஜூலை:31
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதையொட்டி விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நேற்று
நடைபெற்றது.
கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டுர் அணை விரைவாக நிரம்பி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரினை ஏரிகளில் முழுமையாக சேமிப்பது தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
விவசாய சங்க பிரதிநிதிகள் புள்ளம்பாடி வாய்க்காலில் உள்ள புதர்களை சுத்தப்படுத்தியும், தண்ணீர் தங்குதடையின்றி கண்டிராதித்தம் ஏரி முதல் சுக்கிரன் ஏரி வரை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் எனவும், ஏரிகளில் உள்ள வரத்துக் வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர் வாரிடவும் கோரிக்கை வைத்தனர். கொள்ளிடம் ஆற்றங்கரையினை முழுமையாக பலப்படுத்தி, போக்குவரத்திற்கு ஏதுவாக பாதை அமைத்திட கோரிக்கை வைத்தனர். கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கப்படும் விதை நெல் மற்றும் உரங்களை போதிய அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், மேலும், இயற்கை உரங்கள் வழங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்திடவும் கோரிக்கை வைத்தனர். அதனைக் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள நீர்வளத் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், பாசன வாய்க்கால்களில் நூறு நாள் பணிகள் மூலமாக தூர் வாரிடவும், இதன் மூலம் ஏரிகளில் தண்ணீரை முழுமையாக சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தினை செறிவூட்டிட பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், வேளாண் துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க விற்பனை கூடத்தில் போதுமான அளவு விதை நெல் மற்றும் உரங்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும் எனவும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி கேட்டுக்கொண்டார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.