நாகர்கோவில் ஜன 22
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் வடசேரி காவல் நிலையத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தொடர் மோசடியில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.
அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது :-
கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து ஈழப்போர் குறித்தும் தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி உருவாக்கம் குறித்தும் பேசியதாக தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களிலும், பொதுவெளியிலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து வருகிறார்.
ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை எனவும் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை நான்தான் எடிட்டிங் மூலமாக உருவாக்கினேன் எனவும் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் தலைவர் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க சொன்னார் அவரை சந்தித்தபோது எனக்கு வாகனம் அனுப்பினார், ஆமைக்கறி சமைத்து போட்டார், தொடர்ந்து போர்க்களத்தில் நான் பிரபாகனுடன் இருந்தபோது எனக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளித்தார் எனக்கூறி உண்மைக்கு புறம்பாக பொதுமக்களை ஏமாற்றும் விதத்தில் இலங்கை தமிழ் மக்களையும் வெளிநாடு வாழ் தமிழர்களையும் ஏமாற்றி மோசடி செய்து அவர்களிடமிருந்து நாம் தமிழர் கட்சிக்கு திரள்நிதி என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி பண வசூல் செய்து வருகிறார்.
போலியான புகைப்படத்தை வைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுவெளியில் கூறி தமிழக மக்களையும் தனது கட்சியினரையும் தனது மோசடி பேச்சால் ஏமாற்றி பொதுவெளியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கும் நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்ததோடு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போல் புகைப்படத்தை எடிட்டிங் மூலம் சித்தரித்து மோசடிகளிலும், பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களும் நாங்களும் மிகுந்த மன உளைச்சல் அடைந்து வருகிறோம்.
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியும் தொடர் மோசடியிலும் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்ற சைமன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.