அரியலூர், ஜன:10
அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளம் கிராமத்திலுள்ள ராணிமங்கம்மாள் மண்டபத்தில், அதிமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அக்கட்சியின் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான பிரேம்குமார் தலைமை வகித்தார். விழாவில்,மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு, புதுஅடுப்பில், புதுப்பானை வைத்து, அதில் பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலாக்காய் உள்ளிட்டவைகளை இட்டு, பொங்கலிட்டு சமத்துவப் பொங்கலை தொடக்கி வைத்தார்.
அதன் பின்னர் சூரிய பகவானுக்கு வாழையில் பொங்கல், வாழைப்பழம், பழங்கள் உள்ளிட்டவைகளை படையலிட்டு வழிப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் அக்கட்சியின் ஒன்றியச் செயலர் செல்வராசு, ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் சரண்யா, அரசு உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், ஆசிரியை செந்தமிழ் செல்வி மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் ஊராட்சித் தலைவர் சுந்தரிதுரைராஜ் அனைவரையும் வரவேற்றார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்



