கோவை, நவ 15
கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி அஸ்வினி. இவர் ஈரோடு மாவட்டத்தில் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்த மாநில அளவிலான தடியூன்றி தாண்டுதல் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவியை பாராட்டி கவுரவிக்கப்பட்டார். மேலும்
இவர் வருகிற நவ. 26 முதல் 30ம் தேதி வரை மத்திய பிரதேசம் லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணன், தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணன், முதல்வர் ஜி. ஆண்டனி ராஜ், பள்ளி நிர்வாகி சாந்தினி அனீஷ் குமார், தலைமை ஆசிரியை லீனா, நிர்வாக அலுவலக அதிகாரி உமாராணி, உடற்கல்வி இயக்குனர் மோகன், மாணவியின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கூறுகையில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பதக்கத்தின் மூலம் தேசிய அளவிலும் உலக அளவில் சென்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்குகிறது எனவே இனிவரும் காலங்களில் இதைவிட கடுமையாக உழைத்து ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இந்திய தேசத்திற்காக தங்கப்பதக்கம் வெல்வதே எனது இலக்கு.
மேலும் போட்டியில் நான் வெல்வதற்கு பள்ளி நிர்வாகம் பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பாக எனது அம்மா என அனைவருமே என்னை ஊக்குவித்து போட்டிகளில் கலந்து கொள்ள வைத்து வெற்றி பெறச் செய்தனர். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டிகளில் கலந்துகொள்ள ஊன்றுகோலை எடுத்துச் செல்லும்போது பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து ஏதாவது ஒரு பேருந்தில் மட்டுமே இந்த ஊன்றுகோலை எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றனர் எனவே தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு விளையாட்டு துறைகளில் ஈடுபடும் மாணவ மாணவியர்களுக்கு தங்களது உபகரணங்களை கொண்டு செல்ல இலவச பயண அட்டை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.