ஊட்டி. பிப்.26.
தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா உரையில் பொது பெயர் அதாவது ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறைகள் மூலம் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும் என அறிவித்தார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி வட்டத்தில் ஊட்டி மார்க்கெட், மற்றும் எம். சி. எம். எஸ் வளாகம் ஆகிய பகுதிகளிலும் கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரி கூட்டுறவு கடையிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் பந்தலூர் பஜார், கூடலூர் இரண்டு இடங்கள் பாடந்துறை ஆகிய பகுதிகளிலும் குன்னூர் வட்டத்தில் கேத்தி பாலாடா, சேலாஸ் மற்றும் சாந்தூர் ஆகிய பகுதிகள் என மொத்தம் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 கூட்டுறவுத்துறை மூலமாகவும், மூன்று தனிநபர் தொழில் முனைவோர் சார்பிலும் நடத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் காணொளி மூலம் சென்னையில் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள முதல்வர் மருந்தக குடோனில் இருந்து அனைத்து மருந்துகளும் 13 மருதகங்களுக்கும் அனுப்பப்பட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகளும், சர்ஜிகல்ஸ் நியூட்ரா சூட்டிக்கல்ஸ் பிராண்டட் மருந்துகளும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்து வகைகளுக்கு 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இது குறித்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 10 மருந்தகங்களும் தனிநபர் தொழில் முனைவோர் சார்பில் மூன்று மருந்தகங்களும், என 13 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்ட மருந்தகங்களுக்கு ரூ. 2 லட்சம் மானியமும், தனிநபர் தொழில் முனைவோர்களுக்கு மருந்தக கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ. 1.50 லட்சம் பணம் மானியமும், ரூ. 1.50 மதிப்பில் ஜெனரிக் மருந்துகளும் மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே பி. பார்ம் மற்றும் எம். பார்ம் படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே ஆகும். மேலும் அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு எளிதாக கிடைக்க செய்வதாகும். ஊட்டி என். சி .எம் எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடை திறப்பு விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.