கிருஷ்ணகிரி மாவட்டம் ஏப். 29
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (38). கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெங்களூருவில் உள்ள நெருங்கிய நண்பருக்கு புதிய மொபைல் போன் இவரது பெயரில் வாங்கி கொடுத்துள்ளார். இரண்டு தவணைகளை செலுத்திய நண்பர் அதன் பிறகு தவணை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 27.04.2025 அன்று வீட்டிற்கு வந்து, பணத்தை கட்டச்சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
பின்னர் அவர் கையில் வைத்திருந்த மொலை போனை பிடுங்கி கால்சட்டை பையில் போட்டுள்ளனர். மொபைலை கேட்டு கால்சட்டை பையில் மணி கையை வைத்தபோது பைனான்ஸ் ஊழியர் தான் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மணி கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த கிராம மக்கள் அங்கு வரவே, மொபைலை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து 108 வாகனம் மூலம் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மணி தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். கடன் தவணையை செலுத்த தவறிய வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கிய சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.