பஞ்சரங்க தலங்களில் 5-வது தலமும், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி விழாவை தொடர்ந்து, தாயாருக்கு என பிரத்தியேகமாக அத்யன உற்சவம்; எனப்படும் ஐந்து நாள் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்த உற்சவம் தை அமாவாசையன்று பூர்த்தி அடையும். அந்த வகையில், அத்யன உற்சவ பூர்த்தி இன்று நடைபெற்றது. விழாவையொட்டி தாயார் அலங்காரத்தில் பரிமள ரெங்கநாதரும், பெருமாள் அலங்காரத்தில் பரிமள ரெங்கநாயகியும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். படிதாண்டா பத்தினியான பரிமள ரெங்கநாயகி வீதிஉலா புறப்பாடு செல்ல மாட்டார் என்பதால் பெருமாள் ரெங்கநாயகி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. தாயார் அலங்காரத்தில் இருந்ததால் பெருமாள் வெளியில் புறப்பாடு செய்யப்படாமல் கோயிலுக்குள்ளேயே பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அத்யன உற்சவம் வைணவ கோயில்களிலேயே மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் மட்டுமே நடத்தப்படும் உற்சவம் என்பது சிறப்புக்குரியதாகும்.



