தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடகா அணைகள் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் மைசூர், மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரதால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியும், கே.ஆர். எஸ் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடியும் மொத்தம் 50 ஆயிரம் கன அடியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையான பிலி குண்டிலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கின்படி 40,000 கன அடி தண்ணீர் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர் பானி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் காவேரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதனால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், கால்நடைகளை ஆற்றின் அருகே கட்ட வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாந்தி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



