தக்கலை நவ 5
கன்னியமாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நிச்சயதார்த்தம் முடிந்ததும் இளம்பெண் மீது மயக்க ‘ஸ்பிரே’ அடித்து மூன்றரை பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வீட்டில் தனியாக இருந்த பெண் குறிவைத்து வித்தியாசமான முறையில் தங்க சங்கலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நூதனை முறையில் தங்க நகைகளை பறிக்கும் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நடந்துள்ளது. வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு வந்து, கதவை திறக்கும் பெண்ணை மயக்கம் அடைய செய்து நகை பறித்துள்ளார் மர்ம நபர் ஒருவர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வாளோடு பகுதியை சேர்ந்த சாஸ்தாவு என்பவர் கொத்தனார் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் இளைய மகள் சரண்யாவுக்கு 23 வயது ஆகிறது. பட்டதாரியான இவர் திங்கள்சந்தையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரண்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்த ஆண்டு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் கொத்தனாரான சாஸ்தாவு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி பாபநாசத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் சரண்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டின் வாசலில் சரண்யா மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுசிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சரண்யா மயக்கம் தெளிந்து பேசினார்.
அப்போது தனது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘தான் வீட்டில் தனியாக இருந்தபோது கதவை தட்டும் சத்தம் கேட்டது. தொடர்ந்து நான் கதவை திறந்தபோது வாசலில் முகமூடி அணிந்து நின்ற ஒரு ஆசாமி திடீரென தனது முகத்தில் மயக்க ‘ஸ்பிரே’ அடித்தார். அதன்பிறகு தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை’ என்று கூறினார்.அந்த ஆசாமி சரண்யா மயங்கியதும் அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் சரண்யாவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து முகமூடி அணிந்த மர்ம ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.