ராமநாதபுரம்,மே 21-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அல் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் சந்தனக்கூடு திருவிழா நேற்று முன் தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 850ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மல்லீது மே 9 ல் தொடங்கியது. இதை தொடர்ந்து.மே18 ஆம் தேதி மாலை 5 மணியளவில் அடிமரம் ஏற்றப்பட்டது. இதில் நேற்று முன் தினம் மாலை 5 மணி மணியளவில் ஏர்வாடி முஜாவிர் நல்ல இபுராஹீம் சந்தனக்கூடு தைக்கா வில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மேளதாளங்கள் வாண வேடிக்கை முழங்க தர்ஹா வந்தது. 20 குதிரைகள், ஒட்டகம் முன்னே செல்ல ரத ஊர்வலம் தர்ஹாவை மூன்று முறை சுற்றி வலம் வந்தது. கடலாடி வட்டார உலமா சபை தலைவர் செய்யது பாரூக் ஆலிம் தூஆ ஓதினார். ஒட்டகம் மீது கொண்டு வரப்பட்ட கொடியை தர்ஹா ஹக்தார் நிர்வாகத்தினர் கொடியேற்றினர் . மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர்..
தர்ஹா ஹக்தார் பொதுமகா சபையினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். மே 31 மாலை 4 மணிக்கு சந்தனக்கூடு திருவிழா ஆரம்பமாகி ஜுன் 1 அதிகாலை 4:30 மணியளவில் புனித மக்பாராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜூன் 7ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியிறக்கப்பட்டு விழா நிறை வடைகிறது. அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய் சோறு பக்தர்களுக்கு வழங்கப்படும். கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார், எஸ்பி சந்தீஷ் அறிவுறுத்தலின் பேரில் 2 கூடுதல்
ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பி, 11 இன்ஸ்பெக்டர் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்