நாகர்கோவில் மே 29
மீனவர் நலன் காக்கும் வகையில், மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக தரப்பிலிருந்து தென்மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என்பதே அகில இந்திய தமிழர் கழகத்தின் நோக்கம்.
மீனவர்களை கடலிருந்தும், கரையிலிருந்தும் அப்புறப் படுத்தி, கார்ப்பரேட் மயமாக்கும் எண்ணத்தில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக உள்ளது. மீனவர்கள் மனதளவிலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள் நலன் காக்கும் வகையிலும், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கும் ஒரு பிரதிநிதித்துவம் தேவை படுகிறது. இந்த பிரநிதித்துவத்தை வழங்க திமுக தரப்பில் முன்வர வேண்டும். அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர் அன்டன் கோம்ஸ், ஏற்கனவே இக் கோரிக்கையை திமுக தலைமைக்கு வைத்துள்ளார்கள். அகில இந்திய தமிழர் கழகமும் தென் மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு மாநிலங்களவைக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



