புதுக்கடை, செப்- 24
புதுக்கடை அருகே பூட்டேற்றி, கல்லடை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (45). இவர் அரசு போக்குவரத்து கழக மார்த்தாண்டம் டெப்போவில் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு தடம் எண் 87 பி மார்த்தாண்டம் – மேல் மிடாலம் பஸ்சை ஒட்டி சென்றார். இரவு 8 மணியளவில் புதுக்கடை பஸ்நிலையம் சென்ற போது, மார்த்தாண்டம் வெட்டு வெந்நி பகுதியை சேர்ந்தவரும், தற்போது அனந்தமங்கலம் பகுதியில் வசித்து வருபவருமான ஜெரோம் (28) என்பவர் பைக்கில் வந்து பஸ்சை மறித்து நின்றுள்ளார்.
இதை ரமேஷ்பாபு தட்டி கேட்டவுடன், ஜெரோம் அவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ரமேஷ் பாபு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.