பூதப்பாண்டி, ஆகஸ்ட் 29 –
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள திடல் ஊராட்சிக்குட்பட்ட இரத்தினபுரம் என்ற கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை கொண்ட பள்ளியாகும். இந்த பள்ளியில் திடல், கடம் படி விளாகம், கொக்கல் விளாகம் மற்றும் ரெத்தினபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்ற பள்ளியாகும். சுமார் 10 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை படி படியாக குறைய தொடங்கியது. அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்தால் தான் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமடையும் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளியில் சேர்க்க தொடங்கினர்.
தனியார் பள்ளிகளின் நிர்வாகமோ குழந்தைகளின் வீட்டு வாசலில் வந்து குழந்தைகளை பள்ளிக்கு கூட்டி சென்று மாலை அதே வாகனத்தில் வீட்டு வாசலில் கொண்டு இறக்கி விட்டு விடுகிறார்கள். அந்த லாஜிக் பெற்றோருக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் பிடித்து போக அநேகமான குழந்தைகள் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அதன் விளைவு அரசு பள்ளியின் மாணவ எண்ணிக்கை கணிசமாக குறைந்து தற்போது இந்த தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் (நான்காம் வகுப்பு) படித்து கொண்டு இருக்கிறார். ஆனால் ஒரு ஆச்சரியம் அந்த ஒரு மாணவனுக்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
நான்காம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்காக நடக்கும் “ராஜ மரியாதை” அப்பிராந்திய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பள்ளியில் ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் இந்த பள்ளியில் பணியாற்றுகிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த மாணவனுக்கு விசாலமான வகுப்பறை, பெரிய கலையரங்கம் என அனைத்து வசதிகளும் தயார்! மாதம் சுமார் ஒரு லட்ச ரூபாய் தலா சம்பளம் பெறும் இந்த இரு ஆசிரியர்களும், ஒரு மாணவனின் வருகையை எதிர்நோக்கி அன்றாடம் பள்ளியில் காத்திருக்கின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 24 லட்ச ரூபாய்க்கு மேல் ஆசிரியர்களுக்கு ஊதியம், மின்சாரம், கட்டிட பராமரிப்பு என சுமார் 30 இலட்ச ரூபாய் செலவில் இந்த மாணவனின் கல்விக்காக பள்ளியைத் திறந்து வைத்திருக்கும் தமிழக பள்ளிக்கல்வி துறையின் இந்த நடவடிக்கை இப்பகுதி மக்களிடையே வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பள்ளியின் மாணவ, மாணவியர்களின் வருகையை கூட்டவோ அல்லது இந்த ஒரு மாணவனை அருகிலுள்ள பள்ளியில் சேர்க்கவோ ஆசிரியரோ பள்ளி கல்வி துறையோ எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை எனவும் இதனால் தனிமையில் பயிலும் அந்த மாணவன் பாடத்தின் சந்தேகத்தை வேறு நண்பர்களுடன் கேட்க முடியாமலும் விளையாட்டு, கலை போன்றவைகளில் ஈடுபட முடியாமலும் இருப்பதாக பொது நல விரும்பிகள் கூறி வருகிறார்கள்.
மேலும் பல அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர் இல்லாமல் வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருவது ஒரு பக்கம் இருக்க இப்படி ஒரே ஒரு மாணவருக்காக ஒரு பள்ளி நடத்தப்படுவது கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை அல்லது அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது என்னவோ நிஜம் தான் என்று கூறுகிறார்கள். மேலும் தமிழக அரசின் காலை மற்றும் பிற்பகல் உணவு அளிக்கும் இந்த திட்டத்தின்படி இந்த மாணவருக்கான உணவினை பள்ளி ஆசிரியர்களே அருகில் உள்ள பள்ளிக்கு சென்று வாங்கி அந்த மாணவனுக்கு வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. அரசினுடைய திட்டங்கள் முறையாக பயன்படுத்தாமல் பல இலட்சம் ரூபாய் பாழாவதுடன் மாணவனின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் நடக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.



