நாகர்கோவில், ஆக. 27 –
கன்னியாகுமரி மாவட்ட பாசன துறையின் கோதையாறு பாசன திட்ட குழு நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. பாசன துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ தலைமை வகித்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மட்டுமே விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் வேறு அதிகாரிகள் தலைமையில் நடத்த முயன்றால் ஏற்றுக் கொள்ள இயலாது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகளின் தீர்வு அல்லது முன்னேற்றம் குறித்து விவாதித்த பின்னரே புதிய விஷயம் பற்றி பேசப்பட வேண்டும் மற்றும் விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
கடந்த காலங்களைப் போன்று பழைய மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விவாதித்த பின்னரே புதிய மனுக்கள் பற்றி விவாதிக்க வேண்டும். புதிய மனுக்கள் வாங்கும் போது விவாதம் நடத்தும் பெயரில் பல மணி நேரம் மற்ற விவசாயிகளை காக்க வைக்கும் தற்போதைய “புதிய” நடைமுறை மாற்றப்பட வேண்டும். குறிப்பாக ஏற்கனவே கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து மட்டுமே அப்போது விவாதிக்கப்பட வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் (2025) மாவட்ட ஆட்சியர் புறக்கணிப்பு மற்றும் அதன் காரணமாக விவசாய பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்யப்பட்டது. அதனால் பொதுவான நீண்ட கால பெரிய பிரச்சனைகள் பற்றி விவாதம் நடத்த இயலவில்லை ஆகவே வருகிற செப்டம்பர் 5ஆம் தேதிக்கு முன்பு ஒரு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு முக்கிய விவசாய பிரதிநிதிகள் அதிகாரிகளை கலந்து கொள்ள செய்து முடிவுகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாய பிரதிநிதிகள் கையெழுத்திட்ட மனு ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயப் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளித்தனர்.



