குளச்சல், செப். 22 –
இரணியல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 9 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இரண்டு பேரும் அந்த பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் டியூஷன் படிக்க செல்வது வழக்கம். சம்பவ தினம் மாலையில் 2 சிறுமிகளும் டியூஷனுக்கு சென்றனர். பின்னர் 2 பேரும் டியூஷன் முடித்து வீட்டுக்கு வந்தனர். அப்போது ஐந்து வயது சிறுமி மிகவும் சோர்வாக இருந்ததை பார்த்த தாயார் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அதற்கு சிறுமி முதலில் பதில் சொல்லாமல் மௌனம் காத்துள்ளார். மீண்டும் இளைய மகளிடம் கேட்டபோது அவர் விபரத்தை கூறினார்.
அதாவது டியூஷன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் தாயான 43 வயது பெண் தன்னை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்த தாய் உடனடியாக மகளை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை கொண்டு சென்றார். மேலும் சிறுமிக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டதால் உடனடியாக குமரி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


