திருப்பூர், ஆகஸ்ட் 22 –
திருப்பூர் மாவட்டம் மண்ணரை கிராமம், கேட்டுத் தோட்டம் பகுதியில் 18 கோடி மதிப்பில் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் மற்றும் கீழ்மட்டம் பாலம் அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நில எடுப்பு தொடர்பாக சர்வே எடுக்கப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு உயர் மட்ட மேம்பாலத்தால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட வருவாய் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரயில்வே துறை சார்பில் ரயில் தண்டவாளங்களுக்கு மேலே உயர் மட்ட மேம்பாலம் ஆனது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருவாய் துறை சார்பில் இரண்டு புறமும் மேம்பாலப் இணைக்கும் பணிகள் தொடங்காமல் இழுபறியாக இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இப்பணிகளை முடிக்கும் வண்ணம் வருவாய்துறை சார்பில் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் நிலங்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு தொகையானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேம்பால பணிகள் அறிவித்த பொழுது இருந்த நிலத்தின் மதிப்பும் தற்போதைய சூழலில் உள்ள நிலத்தின் மதிப்பும் பெருமளவு வித்யாசம் இருப்பதால் தங்களுக்கு நியாயமான இழப்பீடு வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதி முழுவதும் கருப்பு கொடி ஏற்றி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாமல் இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்த ரயில்வே மேம்பாலத்திற்காக சுமார் 3 ஏக்கர் நிலமானது கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த மூன்று ஏக்கர் நிலங்களை நம்பி 48 குடும்பங்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு சென்ட் 5 சென்ட் 8 சென்ட் இப்படி தங்களுக்கு சொந்தமான நிலங்களை இழக்கின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வருவாய் துறை சார்பில் எங்களை அழைத்து பேசிய போது அனைவருக்கும் சமமான இழப்பீடு கிடைக்கும் என்றும் ஒரு சென்ட்க்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் பணிகள் செயல்படுத்தப்படாமல் மீண்டும் காலதாமதம் ஆனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பணிகளை தொடருவதாக வருவாய் துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். மேலும் இழப்பீடு தொடர்பாக கேட்டபோது அனைவருக்கும் சமமான இழப்பீட்டுத் தொகை கிடைக்காது என்றும் ஒருவருக்கு 20 ஆயிரம் ஒருவருக்கு 40 ஆயிரம் ஒருவருக்கு மூன்று லட்சம் என இடத்திற்கு தகுந்தபடி தான் இழப்பீடு வழங்க முடியும் என வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் இங்குள்ள நிலத்தின் சந்தை மதிப்பு ஐந்து முதல் 10 லட்சம் வரை விலை போகிறது. ஆனால் எங்களுக்கு அந்தத் தொகை கூட வேண்டாம். அனைவருக்கும் அரசு அறிவித்த சமமான இழப்பீடு கிடைக்கும் என நம்பி இருந்த நிலையில் தற்போது வருவாய் துறையினர் இவ்வாறு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும் இதனை நம்பி உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அனைவருக்கும் சமமான உரிய இழப்பீடு கிடைத்தால் மட்டுமே இந்த பணிகளை தொடர அனுமதிப்பதாகவும் இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மேம்பாலத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும் எங்களுக்கு உரிய இழப்பீடு அளித்தால் போதும் எனவும் சாலை மறியலில் ஈடுபட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.



