திருப்புவனம், ஆக. 20 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட சந்தைக்கடை பகுதி தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. சந்தைக்கடை பகுதி திருப்புவனத்தின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேருந்து ஏறுவதற்காக அதிக அளவில் செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகமாக நடமாடக்கூடிய இடம். இந்த பகுதியில் மீன் கடை, கோழிக்கடை உள்ளது. கோழி, மீன் கழிவுகள் மற்றும் ஏராளமான பிளாஸ்டிக் பொருள்கள் குவியல் குவியலாக கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் சுவாச பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் புகார் கூறியதும் பேரூராட்சி நிர்வாகம் மக்களின் கண்துடைப்புக்கு வந்து குப்பைகளை அள்ளிச் செல்வதாகவும் அதன் பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்புவனம் பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.



