திருவண்ணாமலை, ஆக. 18 –
திருவண்ணாமலை அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தும்படி கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வட்டம் மேல் பாச்சார் கிராம மக்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் தர்ப்பகராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மேல் பாச்சாரில் பனக்காட்டிலிருந்து கீழ் இருளர் காலனி வரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது கோயிலுக்கு சொந்தமான இடம் ஆகும். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது நிலத்திற்கு செல்வதற்கு ஏதுவாக கோயில் இடத்தை ஆக்கிரமித்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சாலை அமைத்து வருகிறார். நாங்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டும் பயனில்லை.
எனவே கோயில் நிலத்தில் தனது சொந்த பயன்பாட்டிற்காக 100 நாள் வேலை திட்டத்தில் சாலை அமைத்து வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுத்து இந்த பணியை தடுத்து நிறுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.



