திருவண்ணாமலை, செப். 24 –
திருவண்ணாமலை காந்திசிலை அருகிலுள்ள விஸ்வ பிராமணர் சத்திரத்தில் விஸ்வகர்மா 7ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக நன்மைக்காக விசேஷ திரவிய ஹோமம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ரத்ததான முகாம் இன்று நடந்தது. ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று காலை மங்கல இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
காலை 8 மணியளவில் ஐவர்ண கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 8.30 மணியளவில் விக்னேஷ்வர பூஜையும் புண்யாஹவாசனமும் 9 மணியளவில் காயத்திரிதேவி சமேத விஸ்வகர்ம ஆவாஹனம் ஷோடசோபச்சார பூஜைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்த விசேஷ த்ரவிய ஹோமங்களும் பின்னர் ஸ்ரீஆதி சிவலிங்க ஆச்சாரிய குருபீடத்தின் சிவ.சிவஞானசேகர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 11 மணியளவில் மகாபூர்ணாஹுதி நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. சக்திவேல் ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கியதோடு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் டி. ராஜசர்மா, நகர தலைவர் எம். அன்பு, நகர செய்தித் தொடர்பாளர் டி. ஜெயக்குமார், நகர அமைப்பாளர் பி. செல்வம், சங்க நிர்வாகி ச. அம்பிகா, தி.மலை அரசு மருத்துவகல்லூரி அரசு மருத்துவர் ஏ. நவநீதம், சுகாதார ஆய்வாளர்கள் ஆர். ராஜேஷ், பி.பாலாஜி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



