தஞ்சாவூர், ஜூலை 3 –
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில் உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கன அடி முதல் 75,000 கன அடி வரை எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம். தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழு கொள்ளளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் யாரும் நீர்நிலைப் பகுதிகளில் குளிக்கவோ நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதரப் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். ஆற்றில் அதிக நீர் வரத்து காரணமாக சுழல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளிக்க செல்லக்கூடாது. வெளியூரிலிருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்க செல்லும் போது உள்ளூர் பொது மக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.