குளச்சல், ஜூன் 26 –
குளச்சல் அருகே உள்ள கூத்த விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் ரமேஷ் (25). திருமணம் ஆகவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரமேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இதற்கிடையே ரமேஷ் மார்த்தாண்டத்திற்கு பைக்கில் சென்ற போது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதனால் மன வேதனையில் இருந்த ரமேஷ் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது விட்டத்தில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குளச்சல் போலீசார் ரமேஷ் உடலை பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராஜன் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.