நாகர்கோவில், ஜூன் 25 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியில் உள்ள ராயன் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மத்தியாஸ் 70, அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களது பிள்ளைகள் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 8:30 மணி அளவில் வீட்டில் பணி செய்யும் பெண்ணை அனுப்பிவிட்டு வெளியே கிளம்பி சென்றுள்ளனர்.
10 மணி அளவில் இவர்களுடைய வீட்டிலிருந்து திடீரென கரும்புகை கிளம்பியுள்ளது இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர் சகாய ப்ரவீன்-க்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு மின் விநியோகத்தை தடை செய்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்து வீட்டின் அனைத்து ஜன்னல் கதவுகளை திறந்து விட்டு புகை வெளியேறச் செய்தனர்.
அப்பகுதி முழுவதும் கருமண்டலம் போல் காட்சி அளித்த நிலையில் படிப்படியாக புகை மண்டலம் குறைந்ததால் அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சமையலறை முழுவதும் மர பலகையிலான கபோர்டு செய்து வைக்கப்பட்டிருந்ததால் தீ புகைந்தபடி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் தீயணைப்புத் துறையினர் புகை மண்டலம் சூழ்ந்த வீட்டிற்குள் செல்லும்போது வெளிச்சம் இல்லாத காரணத்தால் அக்கம் பக்கத்தினரிடம் டார்ச் லைட் இருக்கிறது என்றால் கொண்டு வாருங்கள் என கேட்டபோது அப்பகுதியில் உள்ள ஒரு பெண் இது கூட உங்களிடம் இல்லையா என்ன தீயணைப்பு துறையினர் என கேலி செய்தபடி டார்ச் லைட் எடுக்க சென்றார்.