திருப்பூர், ஜூன் 23 –
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக சித்தரித்த திமுக ஐ.டி.விங் நிர்வாகிகள், திமுக அமைச்சர் மீது நடவடிக்கைக் கோரி முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் புரட்சித் தமிழர் எடப்பாடியாரை குறித்து கார்ட்டூன் சித்தரித்த திமுக ஐடி விங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைபுதூர் நடராஜன், அதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில்: திமுக ஐடி விங் நிர்வாகிகளும், திமுக அமைச்சர் ராஜாவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை தவறாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளதாகவும் அவர்களை இழிவாக சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திமுகவினர் பண்பாடு இல்லாத அரசியலை காண்பித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளரை இது போன்று இழிவாக நடத்தியதை அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் இந்த கார்ட்டூன் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுகவை பொறுத்தவரை யாரையும் ஒருபோதும் தறைகுறைவாகவோ இழிவாகவோ நடத்தியது கிடையாது. நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் ஆனால் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை சித்தரித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் அதிமுக விடவும் மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப பிரிவு உள்ளது. நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள். உடனடியாக இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக்க தமிழகம் முழுவதும் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்றும் மீண்டும் எடப்பாடியார் நிச்சயம் முதல்வராக வருவார். இன்று இதுபோன்று செய்தவர்கள் நிச்சயம் அதற்கான பலன்களை அனுபவிப்பார் என்றும் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.