திற்பரப்பு, ஜூன் 19 –
திற்பரப்பு – களியல் செல்லும் சாலையில் நெடுஞ்சாலை புறம்போக்கு நிலத்தில் இரண்டு வீடுகள் இருந்தன. இந்த இரண்டு வீடுகளை அகற்றக்கோரி முதியவர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு இடையே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவரின் வீடும் ஆக்கிரமிப்பு நிலத்தில் தான் உள்ளது என எதிர் தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில் ஒரு வீட்டில் திற்பரப்பு நகர பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் கட்சி அலுவலகம் மற்றும் அருகில் உள்ள வீடுகள் அப்புறப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொண்டர்கள் அலுவலகத்தை இடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் வழக்கு தொடுத்தவரின் மகனின் வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதை அகற்றிய பிறகு தங்களது அலுவலகத்தை இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து வழக்கு தொடுத்த முதியவர் மகன் வீட்டின் ஆக்கிரமிப்பு பகுதி உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டது. அத்துடன் அருகில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளும் இடிக்கப்பட்டது. இதையொட்டி ஏராளம் போலீசார் குவிக்கப்பட்டனர்.