பூதப்பாண்டி, ஜுன் 18 –
பூதப்பாண்டி அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டில் இஞ்சினியரிங் படிப்பில் சேர்ந்த விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா கிறிஸ்துராஜபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தனது குடும்ப காரணமாக படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலையினால் 2019-ஆம் ஆண்டு படிப்பை நிறுத்தினார். பின்னர் 2020 ஜுலை மாதம் கல்லூரி நிர்வாகத்திடம் தனது கல்விச் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்கக் கேட்டுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் நிலுவைக் கட்டணமாக ரூ.45,000/- செலுத்தினால்தான் சான்றிதழ்களைக் கொடுக்க முடியும் எனக்கூறி மாணவனின் கல்விச் சான்றிதழ்களைக் கொடுக்க மறுத்துள்ளது. எனவே, கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களைத் தர மறுத்த நிலையில் மாணவன் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு கடந்த மே மாதம் தனது அசல் சான்றிதழ்களைப் பெற்று தரக் கோரி மனு அனுப்பியுள்ளார். பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவுப்படி சட்டத் தன்னார்வலர் பரமேஸ் மூலம் கல்லூரி முதல்வருக்கு நேற்று நேரில் ஆஜராகும்படி அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் முன் ஆஜரான கல்லூரியின் அலுவலக எழுத்தர் மாணவனின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் பொறியியல் சான்றிதழ்கள் ஆகியவற்றை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பூதப்பாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியுமாகிய கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். நீதிபதி அதை சம்பந்தப்பட்ட மாணவனிடம் வழங்கினார்.