ஈரோடு, ஜூன் 17 –
ஈரோடு மக்கள் ஆட்டோ நல சங்கம் முதலாம் ஆண்டு வெற்றி விழா மற்றும் மக்கள் ஆட்டோ குடும்பங்கள் சங்கமிக்கும் விழா தலைவர் அப்துல் ரகிம் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலு மணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த வேண்டும். மீட்டர் படி வாடகை வசூலிக்க வேண்டும். ஈரோடு மக்கள் ஆட்டோ நல சங்கத்தினர் மீட்டர்படி பொதுமக்களிடம் பணம் கட்டணம் வசூலிப்பது வரவேற்கத்தக்கது. மேலும் அனைத்து ஆட்டோ டிரைவர்களும் சட்ட திட்டங்களையும் அவ்வப்போது அரசு நடைமுறைப்படுத்தும் வாகன விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும். சுய ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். உயிரை விட ஒழுக்கம் மேலானது. அனைத்து ஆட்டோ டிரைவர்களும் எதிர்மறையான எண்ணங்களை தவிடு பொடியாக்கி பொது மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஈரோடு அரசு மருத்துவமனை மனநல டாக்டர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். சங்கத் துணை செயலாளர்கள் பழனியப்பன், விக்னேஷ், துணைத் தலைவர்கள் குணசேகரன், தியாகராஜன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.