ஈரோடு, ஜூன் 16 –
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா 996 குழுக்களுக்கு ரூ.96.20 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மகளிருக்கு நிதி சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்று மகளிர் திட்டம் சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக மகளிர் சுய தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக உருவாக்கிடவும், பொருளாதார ரீதியாக உயர்நிலை அடையவும், அவர்களின் நிதி மேம்பாட்டிற்காகவும் பொருளாதார கடனுதவிகளை வழங்கி வருகின்றார்கள். மேலும் ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 531 குழுக்களுக்கு ரூ.57.20 கோடி மற்றும் நகர்புறப்பகுதிகளில் 389 குழுக்களுக்கு ரூ.38.07 கோடி என மொத்தம் 920 குழுக்களுக்கு ரூ.95.27 கோடி மகளிர் சுய உதவிக்குழுவினரின் வங்கி இணைப்பு மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ31.00 இலட்சம் கடனுதவியாகவும் மற்றும் 67 பயனாளிகளுக்கு ரூ.62 இலட்சம் தொழில் முனைவோர் கடனுதவிகள் என மொத்தம் ரூ.96.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 8,867 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 94,281 உறுப்பினர்களாக உள்ளார்கள். இது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெண்களின் மொத்த தொகையில் 10 சதவிகிதம் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளார்கள். மீதமுள்ள மகளிரும் இத்திட்டத்தில் இணைந்து தங்கள் குடும்பத்தையும், தாங்கள் வாழும் பகுதியை மேம்படுத்திட வேண்டும். கடந்த ஆண்டு மகளிர் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பிற்கு ரூ.1,120 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்தாண்டு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழாவை முன்னிட்டு சிறந்த சமுதாய அமைப்புகளுக்கான மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்கள். மாநில அளவிலான பன்முகக் கலாச்சாரப் போட்டியான கயிறு இழுத்தல் போட்டியில் முதலிடம் பெற்ற கோபிச்செட்டிப்பாளையம் வட்டாரம் பெருந்தலையூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.25,000 பரிசுத்தொகை மற்றும் கேடயம், சிறந்த சமுதாய அமைப்புகளுக்கான மணிமேகலை விருது பெற்ற சத்தியமங்கலம் வட்டாரம், சதுமுகை ஊராட்சி, துளசி மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சலங்கபாளையம் பேரூராட்சி, விசாலாட்சி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கான பரிசுத்தொகை தலா ரூ.1.00 இலட்சம் மற்றும் கேடயமும், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம் புஞ்சைத்துறையம்பாளையம் ஊராட்சிக்கு சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான பரிசுத் தொகை ரூ.3 லட்சம் மற்றும் கேடயமும் மகளிர் சுய உதவிக் குழு தின விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திர குமார், ஏ.ஜி.வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், தொழிலாளர் நலத்துறை முருகேசன், மகளிர் திட்ட அலுவலர் பிரியா, மாவட்ட முதன்மை வங்கி அலுவலர் விவேகானந்தன் மற்றும் மகளிர் திட்ட உதவி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.