தஞ்சாவூர், ஜூன் 7 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை (மெரூன் நிறம்) வைத்துள்ள நபர் இயற்கையாக மரணம் அடைந்தால் அவரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை ரூபாய் 20,000 மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூபாய் 2500 என மொத்தம் ரூபாய் 22,500 வழங்கப்படும். இதில் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை சுமார் 2,500 தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் அளிக்கப்பட்டிருப்பின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் உறுப்பினராக உள்ள நபரின் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூபாய் 20,000 மட்டுமே வழங்கப்படும் .எனவே முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ,கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான ஓய்வூதியம் மற்றும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குழந்தைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனைப் பெற நிகழ்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 மாதத்திற்குள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய கிராம அலுவலர் மற்றும் தனி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் தவிர்க்க இயலாத காரணங்களினால் கால தாமதமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களும் உரிய அலுவலகரிடம் அனுமதி பெற்ற பிறகு பயன்பெற முடியும் (காலதாமத காலம் அதிகபட்சம் 1. 1/2 ஆண்டு வரை). எனவே மேற்கண்டவாறு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பொது மக்கள் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.