மார்த்தாண்டம், ஜூன் 7 –
குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபி மகன் முரளி (35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். நேற்று வெளிநாட்டிற்கு செல்ல உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது இரண்டு சிறு குழந்தைகளுக்கு மார்த்தாண்டம் பகுதியில் இருந்து பிரியாணி வாங்க பைக்கில் சென்றார். பின்னர் பிரியாணி வாங்கி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்த போது குழித்துறை சந்திப்பு பகுதியில் வைத்து இவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கனிம வளம் ஏற்றி கேரளாவிற்கு சென்று கொண்டு இருந்த டாரஸ் லாரி மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக முரளி உயிர் இழந்தார்.உடனடி அங்கு குவிந்த ஊர்மக்கள் ஆத்திரமடைந்து கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கு எதிராக காவல் துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் தீடீர் என இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.தொடர்ந்து களியக்காவிளை போலீசார் அவரது உடலை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று வெளிநாடு செல்ல இருந்த நிலையில் தனது இரு குழந்தைகளுக்கு பிரியாணி வாங்க சென்றவர் கனிமவள வாகனம் மோதி பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.