நாகர்கோவில், ஜூன் 2:
ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட நாகர்கோவிலை சேர்ந்த இளம் பெண்ணை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிடும் மோகம் இளைஞர்கள், இளம்பெண்கள் இடையே அதிகரித்து இருக்கிறது. தங்களது உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் பல்வேறு வடிவங்களில் வீடியோக்களை எடுத்து அதை ரீல்ஸ் ஆக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் ரசிக்கும் படியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியும் இருக்கிறது. ஆனால் சிலர் வெளியிடும் வீடியோக்கள் முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் பொதுமக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இந்த சமூகத்திற்கு தவறான வழிகாட்டியாக அந்த வீடியோக்கள் அமைகின்றன. அந்த வகையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம் பெண், ஓடும் ரயிலில் வீடியோ எடுத்து அதை ரீல்சாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ரயில் வேகமாக செல்லும் நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பேராபத்தை உணராமல் ரீல்ஸ் மோகத்தில் வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் மீது ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதள வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளைஞர்கள், இளம்பெண்களை தவறான செயலுக்கு ஊக்குவிக்கும் செயலாக இந்த பெண்ணின் வீடியோ அமைந்துள்ளதால் உடனடியாக பதிவை அகற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெண்ணின் இந்த வீடியோ வைரல் ஆவதை தொடர்ந்து தற்போது ரயில்வே பாதுகாப்பு சட்டப்படி இளம் பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அந்த இளம் பெண்ணை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். தண்டனைகள் கடுமையாகும் போது தான் தவறுகள் குறையும். எனவே இது போன்ற ஆபத்தான நிலையில் வீடியோக்கள் வெளியிட்டு ரீல்ஸ் மோகத்தில் அதை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.