ஈரோடு மே 18
அந்தியூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கோபிகா.
இவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளில் உள்ள விரல்கள் இணைந்துள்ளது.
இதனால் ஒன்றாக உள்ள கை விரல்களை ஆபரேசன் மூலம் தனித்தனியாக பிரிப்பதற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபிகாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து ஒட்டி உள்ள விரல்களை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தனியாக பிரிக்க முடிவு செய்தனர்.அதன்படி முதலில் வலது கை விரல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வலது கை விரல்கள் (ஆள் காட்டி விரல் மற்றும் நடு விரல்) அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்து நடு விரலும் மற்றும் மோதிர விரலும் பிரிக்கப்பட உள்ளன.
இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் ரூ.80,000 முதல் ரூ.1,00,000 இலட்சம் வரை செலவு ஆகக்கூடிய நிலையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை செய்யப்பட்டுள்ளது. ஆபரேஷனுக்கு பிறகு சிறுமி கோபிகா நலமுடன் உள்ளார்.
இது குறித்து சிறுமி கோபிகா தெரிவிக்கையில்
பிறவியிலேயே இரண்டு கைகளில் உள்ள விரல்களும் இணைந்தே பிறந்த எனக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தற்போது எனது விரல்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இக்குறைபாட்டினால் நாள்தோறும் எனது அன்றாட வேலைகளை செய்வது மிகவும் சிரமமாகவும், கடினமாகவும் இருந்தது. மேலும் பிறருடைய உதவியுடன் தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. இச்சிகிச்சை மூலம் நான் எனது அன்றாட வேலைகளை இனிமேல் நானே செய்து கொள்வேன். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மருத்துவர்களுக்கும் நிறைந்த மனதுடன் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.


