நாகர்கோவில், மே 15
நாகர்கோவிலில் நடைபெற்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்லூரி கனவு உயர்வு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் கல்லூரி கனவு பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் குமரி மாவட்ட மாணவ மாணவியருக்காக நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு தலைமை வைத்து பேசினார்.
இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 1080 மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மரிய பாக்கியசீலன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சப் கலெக்டர் வினய் குமார் மீனா, நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் திற திறமை வாய்ந்தவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.



